IND vs NZ 1st T20I 2021 : புள்ளிவிவரம், டாஸ் கவலை இல்லாத ஜெய்ப்பூர் மைதானம் - பிட்ச், வெதர் ரிப்போர்ட்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி நாளை நவம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஜெய்ப்பூரில் துவங்குகிறது.

Photo Credits : Getty Images

போட்டி விவரம்:

இந்தியா V நியூஸிலாந்து, முதல் டி20, இரவு 7.00 மணி, சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்.

நேரடி ஒளிபரப்பு:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்.

புதிய அத்யாயம்:

டி20 உலக கோப்பை தோல்விக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா சொந்த மண்ணில் சந்திக்க உள்ளது.

  • இந்த தொடர் முதல் புதிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி புதிய அத்தியாயத்தை துவக்க உள்ளது.

முன்னோட்டம்:

இந்தியா : நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தபோதிலும் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் தோல்வியால் இந்திய வீரர்கள் மனதளவில் சோர்ந்து போய் உள்ளனர், இதனால் இந்த தொடரில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கலக்கிய பல இளம் நட்சத்திர இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுள்ளது.

விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தோல்வியை மறந்து விட்டு அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் அடுத்த டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற புதிய கேப்டன் ரோகித் சர்மா புதிய உத்வேகத்துடன் புதிய அணியை இந்த தொடர் முதல் உருவாக்குவார் என நம்பலாம்.

  • மூத்த வீரர்கள் இல்லை என்றாலும் கேஎல் ராகுல், ருதுராஜ், ஹர்ஷல் படேல் என வெற்றி பெறுவதற்கு தகுதியான பல இளம் வீரர்கள் அணியில் நிறைந்துள்ளதால் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நியூஸிலாந்து : மறுபுறம் நேற்று முன்தினம் துபாயில் ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டி வரை சென்று டி20 உலக கோப்பையை பறிகொடுத்த நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் வெற்றி பெற்று வெற்றியோடு நாடு திரும்ப போட்டி போடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த தொடர் அந்த அளவுக்கு முக்கியம் இல்லை என்பதால் உலககோப்பையில் விளையாடிய முக்கிய நியூஸிலாந்து வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தத் தொடரில் ஓய்வெடுத்து விட்டு டெஸ்ட் தொடருக்கு திரும்ப உள்ளதால் அவருக்கு பதில் டிம் சவுத்தி கேப்டன்ஷிப் செய்ய உள்ளார், இருப்பினும் கூட இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சாய்ப்பதற்கு நியூசிலாந்து எல்லா முயற்சிகளையும் எடுக்க தயாராகியுள்ளது.

புள்ளிவிவரம்:

வரலாற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை மொத்தம் 18 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

  • அதில் நியூசிலாந்து 9 முறை வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது, இந்தியா 8 போட்டிகளில் வென்றுள்ளது, 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

போட்டி நடைபெறும் இந்திய மண்ணில் இந்த 2 அணிகளும் வரலாற்றில் இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்றுள்ளன, அதிலும் நியூசிலாந்து 3 முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 2 போட்டிகளில் இந்தியா வென்றது, 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

Photo : Getty Images


  • கடைசியாக சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்து இந்தியாவின் டி20 உலகக் கோப்பை கனவை உடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஜொலிக்கும் ஜெய்ப்பூர்:

கடந்த ஏப்ரலில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும் மேலும் போட்டி நடைபெறும் ஜெய்ப்பூரில் கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் அந்த பகுதி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • இந்த போட்டியை காண்பதற்கு மைதானத்தின் மொத்த கொள்ளளவான 25000 ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் கடந்த சில வருடங்களாக நிலவிய குளறுபடிகள் காரணமாக அங்கு கடந்த 2013 பின் கிரிக்கெட் போட்டியில் நடைபெறாமல் இருந்தது.

  • கடைசியாக ஜெய்ப்பூர் மைதானத்தில் கடந்த 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 359 ரன்களை துரத்திய இந்தியா ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் அதிரடி சதத்தால் அபார வெற்றி பெற்றது.

வெதர் ரிப்போர்ட்:

போட்டி நடைபெறும் ஜெய்ப்பூரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை இருப்பினும் லேசான மேகக்கூட்டம் காணப்படும்.

பிட்ச் ரிப்போர்ட்:

  • இந்த மைதானத்தில் முதல்முறையாக இப்போதுதான் ஒரு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

போட்டி நடைபெறும் ஜெய்பூர் நகரில் இரவு 7 மணியின் போது பனியின் தாக்கம் வந்துவிடும் என்பதால் 2 அணிகளுக்குமே பந்துவீச்சு சற்று கடினமாக இருக்கும், அதே சமயம் பேட்டிங் செய்யும் வீரர்கள் எளிதாக ரன்கள் குவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

அத்துடன் 2 இன்னிங்ஸ்களிலும் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் சமீபத்தில் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பை போல் அல்லாமல் பேட்டிங் அல்லது பவுலிங் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

Previous Post Next Post

Your Reaction