ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ மற்றும் அஹமதாபாத் ஆகிய பொருள் புதிதாக 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக அந்த 2 புதிய அணிகளுக்கான முழு வீரர்களை தேர்வு செய்யும் வகையில் இந்த வருடம் சிறிய அளவில் இல்லாமல் மெகா ஏலம் நடைபெற உள்ளது.
Photo Credits : BCCI/IPL |
இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஏற்கனவே உள்ள சென்னை, மும்பை உள்ளிட்ட பழைய 8 அணிகள் தாங்கள் விரும்பும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம், அதைப்போல் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 2 அணிகளும் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது.
தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
இதை அடுத்து எந்தெந்த வீரர்களை ஏலத்திற்கு முன்பாக தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுகளை எடுக்க கடந்த சில வாரங்களாகவே அனைத்து அணிகளும் மும்முரமான வேலைகளில் ஈடுபட்டு வந்தன.
இந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல் பற்றிய முழு விவரங்கள் இன்று வெளியாகியுள்ளன, இந்த அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. அதன்படி
1. சென்னை சூப்பர் கிங்ஸ்:
நடப்பு சாம்பியன் மற்றும் 4 முறை கோப்பைகளை வென்ற ஐபிஎல் வரலாற்றில் 2வது வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் கேப்டன் எம்எஸ் தோனியை முதல் வீரராக தக்க வைத்துள்ளது.
சென்னை தக்கவைத்துள்ள 4 வீரர்கள்:
- எம்எஸ் தோனி - 12 கோடிகள்
- ரவீந்திர ஜடேஜா - 16 கோடிகள்.
- ருதுராஜ் கைக்வாட் - 6 கோடிகள்
- மொய்ன் அலி - 8 கோடிகள் (வெளிநாடு)
2. மும்பை இந்தியன்ஸ்:
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பைகளை வென்ற வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி அதன் கேப்டன் மற்றும் முக்கிய வீரர் ரோகித் சர்மாவை முதல் வீரராக தக்கவைத்துள்ளது.
மும்பை தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல்:
- ரோஹித் சர்மா - 16 கோடிகள்.
- ஜஸ்பிரித் பும்ரா - 12 கோடிகள்.
- சூரியகுமார் யாதவ் - 8 கோடிகள்.
- கிரண் பொல்லார்ட் - 6 கோடிகள் (வெளிநாடு)
3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
சமீபத்தில் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த முக்கிய வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றதால் விராட் கோலி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகிய இருவரை மட்டும் பெங்களூரு நிர்வாகம் தக்கவைத்துள்ளது, அத்துடன் கடந்த சீசனில் உடன் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகி உள்ளதால் புதிய கேப்டன் யார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல்:
- விராட் கோலி - 15 கோடிகள்.
- கிளென் மேக்ஸ்வெல் - 11 கோடிகள் (வெளிநாடு)
- முஹம்மது சிராஜ் - 7 கோடிகள்.
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
2 முறை கோப்பைகளை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட இங்கிலாந்தின் இயன் மோர்கனை தக்க வைக்கவில்லை, அத்துடன் இளம் வீரர் சுப்மன் கில் அந்த அணி தக்க வைக்காதது ஆச்சரியமாக உள்ளது.
- அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது.
கொல்கத்தா தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல்:
- சுனில் நரேன் (வெளிநாடு) - 6 கோடிகள்
- ஆண்ட்ரே ரசல் (வெளிநாடு) - 12 கோடிகள்
- வருண் சக்ரவர்த்தி - 8 கோடிகள்
- வெங்கடேஷ் ஐயர் - 8 கோடிகள்
5. சன் ரைசர்ஸ் ஹைதெராபாத்:
முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னரை ஏற்கனவே கழட்டிவிட்ட நிர்வாகம் கேன் வில்லியம்சனை தக்கவைத்துள்ளது. அதேபோல் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரசித் கானை அந்த நிர்வாகம் கழட்டி விட்டுள்ளது அந்த அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதெராபாத் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல்:
- கேன் வில்லியம்சன் - 14 கோடிகள் (வெளிநாடு)
- உம்ரன் மாலிக் - 4 கோடிகள்.
- அப்துல் சாமட் - 4 கோடிகள்.
6. ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஐபிஎல் வரலாற்றின் முதல் கோப்பையை வென்று ராஜஸ்தான் அணி நிர்வாகம் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சனை கேப்டனாக தொடர்ந்து தக்க வைத்துள்ளது.
ராஜஸ்தான் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல்:
- சஞ்சு சாம்சன் - 14 கோடிகள்
- ஜோஸ் பட்லர் - 10 கோடிகள் (வெளிநாடு)
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 4 கோடிகள்
7. டெல்லி கேபிட்டல்ஸ்:
எப்போதும் இளம் வீரர்களை குறிவைக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்துள்ள வீரர்கள் இதோ:
- ரிஷப் பண்ட் - 16 கோடிகள்
- பிரிதிவி ஷா - 9 கோடிகள்
- அக்சர் படேல் - 7.50 கோடிகள்
- அன்றிச் நோர்ட்ஜெ - 6.50 கோடிகள் (வெளிநாடு)
- இருப்பினும் ஸ்ரேயாஸ் அய்யர், தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தென் ஆபிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஆகிய வீரர்களை தக்க வைக்காதது ஆச்சரியமாகும்.
- இந்த 4 வீரர்களுக்கு செலவிட்ட 39 கோடிகள் போக தக்க வைக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தொகை விதிமுறை அடிப்படையில் 47.5 கோடிகள் டெல்லி அணியிடம் கையிருப்பு உள்ளது.
8. பஞ்சாப் கிங்ஸ்:
பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் கடந்த 2014 முதல் ஒருமுறைகூட பிளையட் சுற்றுக்கு தகுதி பெற முடியாத காரணத்தால் புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது ஆனால் அந்த அணியின் கேப்டனாக இருந்த முக்கிய வீரர்கள் கேஎல் ராகுல் தக்கவைக்காதது ஏமாற்றமளிக்கிறது.
பஞ்சாப் நிர்வாகம் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்:
- மயங் அகர்வால் - 12 கோடிகள்
- அர்ஷ்தீப் சிங் - 4 கோடிகள்
லக்னோ : இது போக புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 2 அணிகளில் லக்னோ அணி நிர்வாகம் கேஎல் ராகுல் மற்றும் ரசித் கான் ஆகியோரை மெகா ஏலத்தின் போது முதல் வீரர்களாக விலைக்கு வாங்க திட்டமிட்டு உள்ளது.
- இதில் ராகுல் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் டேவிட் வார்னர், ஹர்டிக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை அகமதாபாத் அணி ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது.