விராட் கோலி கேப்டனாக தகுதியானவர் என தெரிந்தே 2014இல் எம்எஸ் தோனி ஓய்வு பெற்றார் - ரவி சாஸ்திரி

இந்திய அணியின் கேப்டனாக இருந்த நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி எப்போதுமே ஆச்சரியமான அதிரடி முடிவுகளை எடுப்பதில் சிறந்தவராக உள்ளார், களத்தில் எத்தனையோ வித்தியாசமான முடிவுகளை எடுத்து வெற்றிகரமாக இருந்த அவர் தனது ஓய்வு பற்றிய முடிவுகளை வெளியிடுவதிலும் மற்றவர்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகவே இருந்தார்.


Photo Credits : Getty Images


குறிப்பாக 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கடைசியாக விளையாடிய அவர் அதன்பின் ஒரு வருடமாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார், அந்த ஒரு வருடமாகவே அனைத்து ஊடகங்களும் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது பற்றி தினந்தோறும் கட்டுரைகள் எழுதி வந்தன.

வித்யாசமான தோனி:

ஆனால் அவரோ கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் மாலை 7.29 அளவில் ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

  • தற்போது கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலிக்கு பதில் ரோகித் சர்மா மாற்றப்பட்டது இந்திய கிரிக்கெட்டில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது ஆனால் தோனி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகிய போதெல்லாம் எந்தவித சர்ச்சையுமே வந்தது கிடையாது என்றே கூறலாம்.

முதலில் 2014 ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை டிரா செய்த பின்னர் வெறும் செய்தியாளர்கள் அறிவிப்பின் வாயிலாக டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியைக் கொடுத்த அவர் 2017 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே மீண்டும் வெறும் செய்தியாளர்கள் அறிவிப்பில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றார். 

அக்கறை:

அவரின் அறிவிப்புகள் எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதே தவிர சர்ச்சைகளை ஏற்படுத்தியதே கிடையாது என்று கூறலாம். 2011 - 2014 வரையிலான காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் என இந்தியாவின் ஜாம்பவான்கள் வரிசையாக ஓய்வுபெற தொடங்கினர், இதனால் அவர்களின் இடத்தை ஈடுகட்ட இளம் வீரர்களை தேடிக் கொண்டிருந்த வேளையில் இந்தியா பல அடுத்தடுத்த படுதோல்விகளை எம் எஸ் தோனி தலைமையில் சந்தித்தது.

2014ஆம் ஆண்டின் முடிவில் தனக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த விராட் கோலி தகுதியானவர் என உணர்ந்த காரணத்தினாலேயே 33 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார், அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு இந்திய அணியை விராட் கோலி உருவாக்க வேண்டும் என்ற அக்கறையினால் 2017ஆம் ஆண்டு வெள்ளை பந்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

ரவி சாஸ்திரி:

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக எம் எஸ் தோனி அறிவித்த விதம் பற்றி சமீபத்தில் பயிற்சியாளராக ஓய்வுபெற்ற ரவி சாஸ்திரியும் நினைவு கூர்ந்துள்ளார். இதுபற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர், 

அந்த முடிவு மிகவும் ஆச்சரியமாக இருந்தது, அந்த நாளில் அவர் என்னிடம் வந்து அணியினரிடம் ஒன்றை கூற விரும்புகிறேன் எனக் கூறினார் நானும் சரி என பதிலளித்தேன். பின்னர் சாதாரணமாக வீரர்கள் இருக்கும் அறைக்கு வந்து ஓய்வு முடிவை அறிவித்தார், அவரின் அந்த முடிவு பல வீரர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது, ஆனால் அதுதான் எம்எஸ் தோனி.

என கூறினார். இந்தியாவுக்காக 60 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள எம்எஸ் தோனி 27 டெஸ்ட் வெற்றிகளை குவித்து அப்போதைய வெற்றிகரமான இந்திய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்திருந்தார், குறிப்பாக 2010ஆம் ஆண்டு இறுதியில் அவர் தலைமையில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக இடம் பிடித்து சாதனை படைத்தது, அதை 7 வருடங்கள் கழித்து தற்போது விராட் கோலி படைத்துள்ளார்.

தகுதியான கோலி:

  • அந்த தருணத்திற்காக அவர் காத்திருந்தார், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக தனது உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என அவர் உணர்ந்த காரணத்தால் ஓய்வு பற்றி 2வது முறையாக யோசிக்காமல் உடனடியாக அறிவித்தார். மேலும் தோனி ஓய்வு பெற்றபோது அடுத்த கேப்டனாக விராட் கோலி தலைமை தாங்க சரியானவர் என எனக்கு தெரியும், தோனிக்கும் அடுத்த கேப்டன் யார் என தெரியும்

என இது பற்றி மேலும் ரவிசாஸ்திரி கூறியிருந்தார். 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது அடிலெய்ட் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் எம்எஸ் தோனி காயம் காரணமாக ஓய்வு எடுத்தால் அந்தப் போட்டியில் விராட் கோலி முதல் முறையாக இந்தியாவிற்கு கேப்டன்ஷிப் செய்தார்.

அந்தப் போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் மிகச்சிறப்பாக இருந்ததன் காரணமாக இந்தியா வெற்றியின் விளிம்பு வரை வந்து தோல்வி அடைந்தது, அதைப் பார்த்த தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிரந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டதாக உணர்ந்து அடுத்த போட்டியிலேயே ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction