ஐபிஎல் 2022 தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக ஏற்கனவே உள்ள சென்னை, மும்பை உள்ளிட்ட 8 அணிகள் தக்க வைத்த வீரர்களின் முழு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
Photo Credits : BCCI/IPL |
- நேற்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் 27 வீரர்களை 8 அணிகளும் தக்கவைத்தன. அதிகபட்சமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகள் தலா 4 வீரர்களை தக்க வைத்தன.
இந்த 27 வீரர்களை தக்க வைக்க 8 அணிகளும் மொத்தம் 297 கோடி ரூபாய்களை செலவிட்டு உள்ளன. அது பற்றிய முழு விவரம் இதோ👇
IPL 2022 Retained Players List : தக்க வைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்
ஏமாற்றமடைந்த 4 வீரர்கள்:
இந்த 27 வீரர்களில் 18 பேர் இந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். இருப்பினும் கடந்த சில வருடங்களாகவே அந்தந்த அணிகளுக்காக சிறப்பாக செயல்பட்டு விளையாடிய போதிலும் தக்க வைக்கப் படாத 4 இளம் இந்திய வீரர்கள் பற்றி பார்ப்போம்:
1. இஷான் கிசான்:
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிசான் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக கடந்த சில வருடங்களாக இருந்து வந்தார், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் அதிரடி சரவெடியாக விளையாடும் வீரராக இருந்த காரணத்தால் இவரை மும்பை தக்க வைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர்.
குறிப்பாக இளம் வீரராக இருப்பதன் காரணமாக ரோஹித், பும்ரா, பொல்லார்ட் ஆகியோருடன் 4-வது வீரராக இஷான் கிஷான் தக்க வைக்கப்படுவார் என முதலில் தகவல்கள் வெளிவந்தன ஆனால் கடைசி நேரத்தில் அவரை விட சற்று வயதான சூரியகுமார் யாதவை மும்பை தக்கவைத்துள்ளது.
- மும்பை அணிக்காக 61 போட்டிகளில் 1452 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஹர்ஷல் படேல்:
ஐபிஎல் 2021 தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஹர்சல் பட்டேல் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியாவிற்காக விளையாடாத வீரர் என்ற சரித்திர சாதனை படைத்தார்.
- ஹாட்ரிக் விக்கெட்கள், வலுவான மும்பைக்கு எதிராக 5 விக்கெட்டுகள், ஊதா தொப்பி என பட்டையை கிளப்பிய இவரை பெங்களூரு அணி நிர்வாகம் தக்க வைக்காமல் போனது மிகப் பெரிய ஆச்சரியம் என்றே கூறலாம்.
விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சிராஜ் ஆகிய 3 வீரர்களுக்கும் பின் 4-வது வீரராக இவரை பெங்களூருவில் நிர்வாகம் தக்கவைக்காதது நிச்சயம் அவரை ஏமாற்றமடைய செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
3. தேவுட் படிக்கல்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கடந்த சில வருடமாக மிகச்சிறப்பாக ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார், இது அந்த அணி 2019 மற்றும் 2020 ஆகிய அடுத்தடுத்த 2 சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற உதவியது.
இருந்த போதிலும் ஐபிஎல் 2022 தொடருக்கு அவரை பெங்களூர் அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை, பெங்களூர் அணிக்காக அவர் இதுவரை 29 போட்டிகளில் பங்கேற்று 1 சதம் உட்பட 884 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. சுப்மன் கில்:
இந்திய கிரிக்கெட்டில் ஒரு வளர்ந்துவரும் வீரராக விளங்கும் சுப்மன் கில் கொல்கத்தா அணிக்காக கடந்த சில வருடங்களாக சிறப்பாகச் செயல்பட்டு வந்தார், கடந்த 2018 முதல் கொல்கத்தா அணிக்காக 58 போட்டிகளில் பங்கேற்ற அவர் 1417 ரன்களை குவித்து அசத்தினார்.
- குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு "வளர்ந்து வரும் வீரர்" விருதை வென்றார்.
ஆனாலும் கடந்த சீசனில் இவர் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறிய காரணத்தால் ஐபிஎல் 2022 தொடருக்கு அவரை கொல்கத்தா அணி நிர்வாகம் தக்கவைக்காமல் கழட்டிவிட்டு உள்ளது.
- கொல்கத்தா அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துள்ளதால் ஒருவேளை மெகா ஏலத்தில் இவரை வாங்க வாய்ப்பு உள்ளது.